பேராசிரியர் திரு. ரகுராமன் அவர்கள், 2022 ஆம் ஆண்டிற்கான விகடனின் நம்பிக்கை விருது பெற்றிருக்கிறார். பேராசிரியர் திரு. நாகராஜன், திரு. பாலநாகேந்திரன் இ.ஆ.ப. ஆகியோரைத் தொடர்ந்து, ஆண்டுதோறும் விகடனால் வெளியிடப்படும் இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ள மூன்றாவது பார்வையற்றவர் இவர்.
நூற்றுக்கும் மேற்பட்ட பார்வைத்திறன் குறையுடைய இளைஞர்களுக்குக் கணினிப் பயிற்சி வழங்கி, அவர்களுக்கான உரிய பணி வாய்ப்பினைப் பெற்றுத் தந்துள்ளார். பார்வையற்றோருக்கான கல்வியைத் தொழில்நுட்ப மயமாக்குவது, நவீன காலகட்டத்திற்கேற்ப பார்வையற்றோர் சமூகத்தை புத்தெழுச்சி கொண்டதாக மாற்றுவது போன்ற கனவுகளை தன் செயல்பாடுகளுக்கான உந்துதல்களாகக் கொண்டவர்.
வழக்கமான நெகிழ்ச்சி, பூரிப்பு தருணங்களால் விருது மேடையைச் சம்பிரதாயமாக்கிவிடாமல், பார்வையற்ற சமூகத்தின் நலன் சார்ந்து அரசு அவசர கதியில் மேற்கொள்ள வேண்டிய இரண்டு நடவடிக்கைகள் குறித்துச் சுட்டிக் காட்டியதன் மூலம், தான் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான அரசின் ஆலோசனை வாரியத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிற மிகச் சரியான உறுப்பினர் என்பதைப் பறைசாற்றியுள்ளார்.
பேராசிரியர் திரு. ரகுராமன் அவர்களுக்கு தொடுகை மின்னிதழ் சார்பாக உளம் கனிந்த வாழ்த்துகள்.
ரகுராம் சார் அவர்களுக்கு வாழ்த்துகள். இதுபோன்ற பல பெருமைகள் வந்து சேர வேண்டும். இவர்கள் வழியில் சென்றால் பலகோடி சாதனை செய்ய முடியும்