இந்தியக் கிரிக்கெட் கட்டுப்ப்ஆட்டு வாரியம் பிசிசிஐ (BCCI), மூன்று உறுப்பினர்களைக்கொண்ட மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் குழுவை அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மாற்றுத்திறனாளிகள் விளையாடும் கிரிக்கெட் போட்டிகளை அங்கீகரிப்பது என முடிவெடுத்தது. அதன்படி, கடந்தடிசம்பர் 12ஆம் தேதி கொல்கத்தாவில் நடந்த வாரியத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் அமைப்பை (Differently Abled Cricket Council of India DCCI) அங்கீகரித்ததோடு,உடல்ச்சவால், செவிச்சவால், பார்வைத்திறன் சவால் மற்றும் சர்க்கர நாற்காலி பயனாளர்கள் என அனைத்துவகைப் பிரிவுகளிலும் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளை ஒருங்கிணைப்பது மற்றும் கண்காணிப்பதை இனி டிசிசிஐ மேற்கொள்ளும் என வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிற இந்தச் செய்தி, பல்வேறு தரப்பாலும் பாராட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவர் மித்தாலிராஜ், “இது முக்கியமான போற்றுதலுக்குரிய முடிவு” எனத் தன் ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.
டிசிசிஐயின் தலைவரான ரவி சௌகான், “வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்விற்குக் காரணமான இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் பொதுச்செயலாளர் திரு. ஜெய்ஷா அவர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் என்றென்றைக்கும் கடமைப்பட்டுள்ளோம்” எனத் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
“நாம் இன்று ஓர் வரலாற்றுத் தருணத்தில் முதல் அடியை எடுத்துவைத்துள்ளோம். இன்னும் மேற்கொள்ள வேண்டிய செயல்கள் நிறைய இருக்கின்றன” என டிசிசிஐ அமைப்பை அங்கீகரித்துப் பேசிய ஜெய்ஷா, எதிர்வரும் டிசம்பர் 28 முதல் 31ஆம் தேதிவரை உடல்ச்சவால் மாற்றுத்திறனாளிகளிடையே நடைபெற உள்ள ஹாப் கோப்பை (hap) கிரிக்கெட் போட்டிகளுக்கான அறிவிப்பையும் வெளியிட்டார்.
ஹரியானா மாநிலம், பஞ்சகுலா நகரிலுள்ள தாவ் தேவிலால் மைதானத்தில் நடைபெற உள்ள இப்போட்டிகளில் மொத்தம் நான்கு அணிகள் பங்கேற்கின்றன. கடந்த 2019 ஆம் ஆண்டு லண்டனில் நடந்த தொடரில் பங்கேற்ற முக்கிய வீரர்களை நான்கு அணிகளாகப் பிரித்து இப்போட்டிகள் திட்டமிடப்பட்டுள்ளன.
இதில் ஒரு சுவாரசியம் என்னவென்றால், கடந்த கரோனா ஊரடங்கின்போது சுமார் 500 மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்களுக்கு உதவி, அவர்களைப் பொருளாதார நெருக்கடியிலிருந்து காப்பாற்றியவர்களின் பெயர்களே அணிகளுக்குச் சூட்டப்பட்டுள்ளன. உதாரணமாக, ஆஸ்த்ரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ஸ்டீவ் வாவின் மேலாளரான ஹார்லி மெட்கால்ஃப் என்பவரின் பெயர் ஒரு அணிக்குச் சூட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் குழுவின் உறுப்பினர்களாக, ரவிகாந்த் சௌகான், சுமித் ஜைன் மற்றும் மஹந்தேஷ் கிவாதாசன்னவார் ஆகியொர் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
Be the first to leave a comment