திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ அலுவலகத்தில் மனுவுடன் மயங்கி விழுந்த மாற்றுத்திறனாளிப் பெண்ணுக்கு எம்.எல்.ஏ சரவணன் சிகிச்சையளித்து உதவினார்.
திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளிப் பெண் சசிகலா. தனக்கு உதவி கோரி எம்.எல்.ஏ அலுவலகத்தில் மனு அளிக்க வந்தபோது, மயங்கி விழுந்த சம்பவம் பலரையும் கலங்க வைத்தது.
கணவரால் கைவிடப்பட்டு ஆதரவின்றி இருதய பிரச்சினை உள்ள குழந்தையுடன் கஷ்டப்படும் சசிகலா, தனக்கும் தன் குழந்தைக்கும் உதவி வேண்டும் என திருப்பரங்குன்றம் தி.மு.க எம்.எல்.ஏ டாக்டர் சரவணனிடம் மனு அளிக்க சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்துககு நேற்று வந்திருந்தார்.
சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் இருந்தவருக்கு திடீரென்று வலிப்பு ஏற்பட்டு மயங்கி ழே விழுந்தார். இதைப்பார்த்து அங்கிருந்தவர்களும் மனு வாங்கிக் கொண்டிருந்த டாக்டர் சரவணனும் வேகமாக சென்று அப்பெண்ணுக்கு முதலுதவி அளித்து, ஓய்வெடுக்க வைத்தனர்.
பின்பு அவரை ஆசுவாசப்படுத்தி அவர் பிரச்சனையை டாக்டர் சரவணன் கேட்டபோது, எந்தவொரு ஆதரவும் இன்றி தவிக்கும் தனக்கும், இருதய பிரச்னையுடன் உள்ள தனது மகனின் மருத்துவத்துக்கு உதவி கேட்டு வந்துள்ளதாகவும், இதைப்பற்றி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை’ என்று அழுதபடி தெரிவித்தார்.
அவருக்கு ஆறுதல் கூறிய டாக்டர் சரவணன், குழந்தைக்கு தேவையான மருத்துவ சிகிச்சையை தனது மருத்துவமனையில் இலவசமாக பார்ப்பதாக அவரிடம் தெரிவித்தவர், அப்பெண்ணுக்கு தற்போதைய செலவுக்கு நிதி உதவி செய்தார்.
மாதம்தோறும் அரசு உதவித்தொகை கிடைக்க கலெக்டர் அலுவலத்துக்கு பரிந்துரை செய்வதாகவும், அப்பெண் விரும்பினால் பெண்கள் காப்பகத்தில் சேர்த்து விடுவதாகவும் உறுதி அளித்துள்ளார். ஆதரவற்ற மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு தக்க நேரத்தில் சிகிச்சை அளித்து எம்.எல்.ஏ செய்த உதவி, நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Be the first to leave a comment