
பார்வையுள்ள நண்பனும் நானுமாய்ப்
பட்டணம் வந்தோம்;
நான் பட்டப் படிப்பில் சேர்ந்தேன், – அவன்
பத்து மாடி ஜவுளிக் கடைக்குப்
பத்தாயிரத்துக்குப் போனான்.
நான் முதுகலையில் புகுந்தேன்,
அவன் மூன்றுகடை மாறி,
நடைபாதையில் கடைவிரித்தான்.
நான் இளங்கலைக் கல்வியியல்
இரண்டாண்டு முடித்தேன்,
இரண்டு சிறு கடைகளை அவன்
சொந்தமாகப் பிடித்தான்.
ஊருக்குத் திரும்பிச் செல்ல
ஒப்பவில்லை மனதுக்கு,
போட்டித்தேர்வு போர்வையைப்
போர்த்திக்கொண்டு விடுதித் தூக்கம்.
இனிய உறக்கத்தினிடையே
இரண்டு மடங்காய் விரிந்தது போர்வை;
பஞ்சாரத்துக்குள் சஞ்சாரித்த
வருங்காலப் பெட்டை அது
கோழிக்குஞ்சாய் குழைந்து
கொதிகலன் மூட்டியது.
இறுகவும் பற்றாமல்,
எதிரேயும் புரளாமல்
இதழ் மெல்ல ஒற்றி,
எழுகின்ற நாசிக் காற்றில்
ஈருடல் கூசி,
முனகலின் சில நொடித் தரிசனத்தில்
மூழ்கத் தொடங்கிய செவிப்பறையை
சிராய்த்துவிட்டது செல்பேசி அழைப்பொலி.
“மச்சான்ஹாஸ்டல்ல தானே இருக்க.
பாப்பா முதல் பிறந்தநாள்
கேக் வெட்ட வந்திருக்கோம்.
நீஸ்நாக்ஸுக்கு வரலை?”
இன்றைய நான்கு மணி சிற்றுண்டிக்கு
நண்பன்தான் நன்கொடையாளன்.
***ப. சரவணமணிகண்டன்
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.

One reply on “கவிதை: பட்டணப் பிரவேசம்”
ஒவ்வொருவருடைய மனக் குமுறலையும் சேர்த்து மொத்தமாக பார்க்க முடிகிறது
LikeLike