தமிழக அரசு நேற்று (16/05/2023) வெளியிட்ட அரசாணையின்படி, சுமார் 16 மாவட்ட ஆட்சியர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் திரு. வினித் S. இ.ஆ.ப. அவர்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிறப்பு-12/05/1983.
மாநிலம்-கேரளா.
திரு. வினித் S. அவர்கள், 2013ஆம் ஆண்டு பேட்ஜை சேர்ந்தவர். குடிமைப்பணிகள் தேர்வில் 56ஆவது இடம் பிடித்த இவர், கேரளாவின் காசர்கோடு அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
2015ல் பழனி துணை ஆட்சியராக நியமிக்கப்பட்ட இவர், நீலகிரி தேயிலைக் கூட்டுறவுக் கழகத்தின் (UNDCOSERVE)மேலாண் இயக்குநர் மற்றும் தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகத்தின் (TANGEDCO) இணை மேலாண் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
கடந்த 21/06/2021 முதல், திருப்பூர் மாவட்ட ஆட்சியராகப் பதவி வகிக்கும் இவர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் ஆணையராகப் பதவி வகிக்கும் திருமதி. ஜெசிந்தா லாசரஸ் இ.ஆ.ப. அவர்கள், தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கான சிறப்புச் செயலராகப் பொறுப்பு வகிப்பார். இதன்மூலம், இனி பள்ளிக்கல்வித்துறையைப் போலவே மாற்றுத்திறனாளிகள் நலத்துறையிலும் ஆணையர், இயக்குநர் என இரு உயர் அதிகாரிகள் பணியாற்றுவார்கள்.
மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் (RPD Act 2016) 2016இன்படி, மாற்றுத்திறனாளிகள் நல ஆணையராக ஒரு மாற்றுத்திறனாளியை நியமிக்க வேண்டும் என்பது மாற்றுத்திறனாளிகள் நலன் மற்றும் உரிமைகளுக்காய் போராடும் சங்கங்கள் மற்றும் அமைப்புகளின் நீண்டநாள் கோரிக்கையாகும்.
1 thought on “மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநராகிறார் வினித் S. இ.ஆ.ப.: யார் இவர்?”