1.
மன தொடு வானத்தை,
தன் சிறகுகளால் தொட்டுவிட,
இன்னும் இன்னும் பறக்கிறது மணிப்புறா.
மாட விளக்கின் கண் சிமிட்டலை சிற்பமாக்கி,
அவள் முகத்தை தேடிக்கொண்டிருக்கிறது!
என் விரல் இமைகளின் முத்தமெடுத்து,
ஈர பல்லவியை எழுத துவங்கினேன்.
செம்முதாய் பறவை ஒன்று சிலிர்க்க,
சிறகிலிருந்து மோதிரம் வந்தது.
அதற்குள் ஒரே ஒரு வரி:
தேசாந்திரிக்கு முகவரி “வெண்மதி”!
என் ஆயுளை நீட்டிக்கும் அதிசயம்;
என்னை அன்றாடம் புதுப்பிக்கும் ரகசியம்!
2.
குழலிசையை பிரித்துப் பார்;
காற்றும் மூங்கிலும் தனித்தனியே நிற்கும்.
நான் மூங்கிலாகும்பொழுது, நீ காற்றாய் வந்து நிறைகிராய்!
என்னை உன்னுள் நிரப்பி வாசித்துப் பார்க்கிறேன்.
என் சுவாசத்தில் நீ இசைக்கப்படுகிறாய்! இதோ,
மழை பெய்து கொண்டிருக்கிறது.
நான் முழுமையாக உயிர் வரை நனைகிறேன்!
ஏன் வானமெல்லாம் நீதானே மேகம்!
3
யாருமற்ற அந்த மலைமுகட்டில் நமக்கென்று அமைக்கப்பட்ட குடில்!
பூக்களும் புள்ளினமும் சாகசம்நிகழ்த்த ,
சத்தங்களின் சமிக்ஞையை
பந்தயமிட்டு புரிந்து கொள்கிறோம்!
முட்டைகளும் அரும்புகளும் உயிர் பெறும் ரகசியத்தை,
நாசி காற்றிடம் களவாடிய சனப்பொழுதில்
சிணுங்கல் இசையோடு பாடத் தொடங்கினாய்;
நீ பூப்படைந்த நாளை!
***தொடர்புக்கு: kammakaraiyon@gmail.com
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
