“ஈரோடு அரசு சிறப்புப் பள்ளியைத் தரம் உயர்த்துங்கள்.” தமிழ்நாடு முதல்வருக்கு மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை
தமிழக சட்டமன்றத்தில் நேற்று (21.04.2022) மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியக் கோரிக்கை தொடர்பான விவாதம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ‘ஈரோடு, செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்த வேண்டும்’ என்கிற ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் பல ஆண்டுகால கோரிக்கை தமிழக அரசால் நிறைவேற்றப்பட்டிருப்பதோடு, கூடுதலாக விருதுநகர், செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாகவும், புதுக்கோட்டை, செவித்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி உயர்நிலைப்பள்ளியாகவும் ரூ. 1.15 கோடி செலவில் தரம் உயர்த்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழக அரசின் இந்த அறிவிப்பால், மாற்றுத்திறனாளி மாணவர்கள் தங்களின் மேல்நிலைக் கல்விக்குச்சென்னையிலிருக்கிற சில அரசு உதவிபெறும் பள்ளிகளை மட்டுமே நம்பியிருந்த நிலை மாறி, இனி தங்கள் சொந்த மாவட்டத்திலேயே படிப்பைத் தொடர்வார்கள். இதனால் மாற்றுத்திறனாளி மாணவர்களின் பள்ளிக்கல்வியில் இடைநிற்றல் வெகுவாகக் குறையும். அத்தோடு, ‘அரசுப் பள்ளிகளில் படித்து, கல்லூரிப் படிப்பைத் தொடரும் பெண்களுக்கு மாதாந்திர கல்வி உதவித்தொகையாக ரூ. 1000 வழங்கப்படும்’ என்ற தமிழக அரசின் அறிவிப்பின் பலனை மாற்றுத்திறனாளி மாணவிகளும் தவறவிடமாட்டார்கள்.
மேலும், சிறப்புப்பள்ளிகளின் விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கான மாதாந்திர உணவு மானியம், ரூ. 900-லிருந்து 1200ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சிறப்புப்பள்ளிகள் தொடர்பான தமிழக அரசின் அறிவிப்புகளை மனமார வரவேற்பதோடு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் அமைச்சரும், மாண்புமிகு தமிழக முதல்வருமான ஐயா திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் தனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
***U. சித்ரா,
தலைவர், ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்.
மானிய கோரிக்கை அறிவிப்புகளை முழுமையாகப் படிக்க:
பின் இணைப்பு:
Be the first to leave a comment