தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பணியிட மாறுதல் மற்றும் பணிநிரவல் அரசாணை கடந்த டிசம்பர் 17ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணை மாற்றுத்திறனாளி ஆசிரியர்களின் நலன்களுக்கு எதிராக இருப்பதாகவும், உடனடியாக தமிழக முதல்வர் இதில் தலையிட்டு, உரிய தீர்வினைப் பெற்றுத்தர வேண்டும் எனவும் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகள் சங்கம் முதல்வருக்குக் கடிதம் எழுதியிருக்கிறது.
“ஊராட்சி, நகராட்சி உள்ளிட்ட அரசு பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து மட்ட ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் மற்றும் உபரி ஆசிரியர்களை பணி நிரவல் கலந்தாய்வுக்கான விதிமுறைகளை வகுத்து பள்ளிக்கல்வித்துறை டிச-17 தேதியிட்டு அரசாணை எண்.176 வெளியிட்டுள்ளது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணை விதிகளின்படியே இனிமேல் ஒவ்வொரு ஆண்டும் பணிமாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என்றும், இதற்காக ஆண்டுதோறும் அரசாணை வெளியிடப்படாது என்றும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
பாதிக்கும் அரசாணை
அரசாணையின் 2-ஆம் பக்கத்தில் உபரி ஆசிரியர்களை பணி நிரவல் செய்யும் விதி (2-a-1.iii)ல், ஏற்கனவே பணிபுரியும் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் தொடர்ந்து அதே பள்ளியில் பணியாற்ற விதிவிலக்கு அளிக்கலாம் என குறிப்பிட்டிருப்பது உடல் ஊனமுற்றோர் உள்ளிட்ட மற்ற அனைத்து வகை மாற்றுத்திறன் ஆசிரியர்களையும், மனவளர்ச்சி பாதிப்பு உள்ளிட்ட மாற்றுத்திறன் குழந்தைகளை பராமரித்து வரும் ஆசிரியர்களை பாதிக்கும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
நீதிமன்ற ஆணைகளுக்கு விரோதம்
கடந்த பத்தாண்டு கால அஇஅதிமுக ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வின்போதும் மாற்றுத்திறனாளிகளை பாதிக்கும் அரசாணைகள் வெளியிடப்பட்டன. எங்களது சங்கத்தின் தலையீடு மற்றும் நீதிமன்ற ஆணைகள் பெறப்பட்டு பின்னர் சரிசெய்யப்பட்டன.
திருத்தம் மேற்கொள்ள உத்தரவிடுக
உடல் ஊனமுற்றோர் உள்ளிட்ட அனைத்து வகை மாற்றுத்திறன் ஆசிரியர்கள் மற்றும் மன வளர்ச்சி உள்ளிட்ட பாதிப்புக்குள்ளான மாற்றுத்திறன் குழந்தைகளை பராமரித்து வரும் ஆசிரியர்களுக்கும் ஏற்கனவே உள்ளது போன்று விதிவிலக்கு அளிக்கும் வகையில் அரசாணையில் உரிய திருத்தம் செய்த பின்னர் அமல்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
கலந்தாலோசித்து அரசாணை
மாற்றுத்திறனாளிகளும் சம்பந்தப்பட்ட இப்படிப்பட்ட அரசாணைகள் வெளியிடுவதற்கு முன் மாற்றுத்திறனாளிகள் நல மாநில ஆணையரை கலந்தாலோசித்து வெளியிட அனைத்து துறை உயரதிகாரிகளுக்கும் முதலமைச்சர் உத்தரவிட வேண்டுமெனவும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் வலியுறுத்திக் கோருகிறோம்.” என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
trichy blind strike not spoken, plogger allways concerned about working [government] disabilities we need to care them also.