தமிழக அரசின் இணைய வடிவமைப்பாளர்கள் கவனத்திற்கு

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

ஒரு இணையதளம் அதிலும் அரசின் சார்பில் பொது மக்களின் அவசியமான பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்படும் இணையதளம் என்பது, அனைவரும் எளிமையாகப் பயன்படுத்தும் வகையில் எளிதாக அணுகும்படியாக (easy to access) வடிவமைக்கப்படுவது கட்டாயம்.  ஆனால், இந்த கரோனா நெருக்கடி காலத்தில் தமிழக அரசால் சுட்டப்பட்டுள்ள பொதுமக்கள் பெரிதும் பயன்படுத்தக்கூடிய இரண்டு இணையதளங்கள் பார்வையற்றோர் அணுகுவதற்கு அத்தனை எளிமையானதாக இல்லை.

இணையதளத்தின் ஸ்க்ரீன் ஷாட்

முதல்வரின் வேண்டுகோளுக்கு இணங்க, கரோனா நிவாரணநிதி வழங்கலாம் என https://ereceipt.tn.gov.in/cmprf/Interface/CMPRF/CMPRF_EntryForm என்ற இணைப்பைச்சொடுக்கினேன். தனியாள் நன்கொடைப் பக்கத்தில் கொடுக்கப்பட்டிருந்த படிவத்தை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்தாலும், அதனை முழுதாய் முடிக்க இயலவில்லை. காரணம், “enter the code” என்ற வாக்கியம்.

கட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள எண்களைப் பார்த்து, உரைப்பெட்டியி்ல் (edit box) உள்ளிட வேண்டும். அப்போதுதான் அடுத்த சாளரம் திறக்கும். ஆனால், கட்டத்தில் இருக்கும் எண்கள் திரைவாசிப்பானுக்கு (screen-reader) உகந்த வடிவில் இருப்பதில்லை. எனவே, அதை அப்படியே மூடிவிட்டு, அரசின் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கணக்கைப் பயன்படுத்தி நிவாரணம் அனுப்பினேன்.

இணையதளத்தின் ஸ்க்ரீன்ஷாட்

அந்தக் கதைதான் அப்படி முடிந்தது என்றால், இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு இறப்பு காரணமாக நான் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல வேண்டியிருந்தது. அப்போது ஈ பதிவு செய்வதற்காக https://eregister.tnega.org/#/user/pass என்ற இணைப்பைச்சொடுக்கினேன். அங்கே எனது செல்பேசி எண்ணைச் சரிபார்க்கிற முதற்கட்டத்திலேயே அதுபோன்ற ஒருசோதனையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. Type the number shown in the box below என்ற வாக்கியம் எனக்கு மிகுந்த மனச்சோர்வை உண்டாக்கியது.

இன்றைய சூழலில் இந்த இரு இணையதளங்களின் பயன்பாட்டு முக்கியத்துவம் நாம் அறிந்ததே. அதிலும், அரசின் ஈ பதிவு செய்வதற்கான இணையதளத்தில் சரளமான கணினிப் பயிற்சி பெற்ற பார்வையற்றவரே தடுமாறும் நிலை இருக்கிறது.

தளத்தில் பயன்படுத்தப்படும் சரிபார்த்தல் முறையை (verification method) ;நான் குறையாகச் சொல்லவில்லை. அதேநேரம், ஒலிவடிவிலான சரிபார்ப்பு முறையையும் (audio verification method) ஒரு தெரிவாக வழங்க வேண்டும். அப்படி வழங்காதது மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016 பிரிவு 42க்கு எதிரானதாகும்.

அதுபோலவே, அரசின் முக்கிய இணையதளங்களில் தேதி தெரிவு செய்தல் நாட்காட்டி முறையில் (calendar Method) அமைக்கப்பட்டிருப்பதும் பார்வையற்றோருக்கு தள அணுகலில் பெரிய சிக்கலை ஏற்படுத்துகிறது. இவற்றையெல்லாம் களைவதற்கு அரசு சார்பில் ஒரு சிறப்புப் பணியிடமாக அணுகும் திறன் சோதனையாளர் (accessibility tester) என்ற பணியிடத்தை உருவாக்கி, அப்பணியிடத்தில் ஒரு திறன் வாய்ந்த பார்வையற்றவரை நியமிக்க வேண்டும்.

இன்றைய நிலையில், பொதுச்சமூகத்திற்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் இடையே நிலவுகிற இடைவெளியை தொழில்நுட்பமே ஓரளவேனும் குறைத்திருக்கிறது. அத்தகைய தொழில்நுட்ப பயன்பாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான சம வாய்ப்பையும், சம பங்கேற்பையும் அரசு கருணை என்று கருதி அல்ல, எங்கள் உரிமை என்று உணர்ந்து வழங்குவதே, அனைவரையும் உள்ளடக்கிய ஆக்கபூர்வமான சமத்துவ சமுதாயம் அமைந்திட வழிவகுக்கும்.

***

ப. சரவணமணிகண்டன்

பகிர

3 thoughts on “தமிழக அரசின் இணைய வடிவமைப்பாளர்கள் கவனத்திற்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *