அன்புத் தோழமைகளே! உங்களிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன். என்னுடைய இந்த எளிமையான கேள்வியை மருத்துவம் மற்றும் தொழில்நுட்பம் சார் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ள தோழமைகளிடம் முன்வைக்கிறேன். பெண்கள் கற்பம் தரித்திருப்பதை உறுதி செய்கிற மிக எளிமையான கருவி ப்ரெக்ன்ன்சி கார்டு. பரிசோதிக்கும் முறையும் மிக எளிமையானது. தெரியாதவர்கள் கூகுல் செய்தும் தெரிந்துகொண்டு பயன்படுத்துகிறார்கள்.
மனித குலத்தைப் பீடிக்கிற கொடிய நோய்களின் தோற்றுவாய்களான நுண் கிருமிகளையும் கண்டறிய மருத்த்உவ உலகில் எத்தனையோ ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால், ஒரு பார்வையற்ற பெண் தன் கற்பத்தைத் தானே அறிந்துகொள்ளும் விதமாக அணுகல் தன்மையுடன் கூடிய accessible pregnancy card இதுவரை வடிவமைக்கப்பட்டிருக்கிறதா? தன்னுடைய இரகசியத்தைத் தானே அறிந்து, தன் இணையருக்கு அறிவிக்கிற பார்வையற்ற பெண்ணின் அந்த சுதந்திரமான வாய்ப்பைப் பற்றி எப்போதாவது மருத்துவ உலகம் சிந்தித்திருக்கிறதா?
இதெல்லாம் ஒரு பிரச்சனையா? என்று இந்தப் பதிவைப் பாதியிலேயே ஸ்கிப் செய்துவிட்டுப் போகிறவர்கள் தாராளமாக அதைச் செய்யுங்கள். மனு ஸ்மிரிதியில் தோய்த்தெடுக்கப்பட்ட உங்கள் மரபணுக்கள் உங்களை அப்படித்தான் சிந்திக்கத் தூண்டும்.
ஆனால், லண்டனைச் சேர்ந்த ஜோஷ் வாசர்மேன் என்ற வடிவமைப்பாளருக்கு முற்போக்காக இந்த accessible pregnancy card பற்றித் தோன்றியிருக்கிறது. முதலில் அவர் சில பார்வையற்ற மகளிரை அணுகி, தன்னுடைய ஒலிவடிவிலான ப்ரெக்ன்ன்சி கார்டை அறிமுகம் செய்திருக்கிறார். ஆனால் அது அத்தனை பிரைவசியாக இல்லை என அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். எனவே, பார்வையற்ற பெண்கள் தொட்டுணரும்படி, கார்டில் தோன்றும் கோடுகள் புடைத்துக்கொள்ளும் வகையில், ஒரு தொழில்நுட்பத்தைப் புகுத்தியுள்ளார். லண்டனைச் சேர்ந்த ராயல் நேஷனல் ஆஃப் தி ப்லைண்ட் என்கிற நிறுவனத்தோடு இணைந்து இந்தக் கருவியை உலகம் முழுவதும் கொண்டுசேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இந்தியாவில் இதுவரை ப்ரெக்னன்சி கார்ட் பயன்படுத்தியிருக்கிற ஒரே ஒரு பெண்கூட இந்தக் கோணத்தில் சிந்தித்திருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. பார்வையற்ற பெண்கள் அதைப் பயன்படுத்தத் தலைப்பட்ட அந்த தருணங்களில் அப்படி சிந்தித்திருக்கக் கூடும் என்றாலும், தன் அபிலாஷையை அவ்வளவு எளிதாக வெளிச்சொல்லிவிடும்படியாகவா பெண்களைப் பழக்கி வைத்திருக்கிறோம்? நாம் பண்பாடு, கலாச்சாரம் என்ற போர்வையில் பழம்பெருமைகளைப் பெசித் திரிகிறவரை, தன்னோடு வாழும் சக மனிதனின் மென் உணர்வுகளைப் புரிந்துகொள்ள வாய்ப்பே இல்லை.
மேலும் தகவல்களுக்கு: www.coolblindtech.com
2 thoughts on “சின்ன விஷயம்தான்”