களப்பணி வீரனுக்கு இதழின் அஞ்சலி

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது
30 ஜூன், 2020

graphic நமக்கான ஊடகம், நமக்கு நாமே ஊடகம்
இந்தியப் பார்வையற்றோர் முற்போக்கு சங்கத்தின் தலைவர் திரு. A.K. அருணாச்சலம் மற்றும் அவர் மனைவி கீதா இருவரும் கரோனா தொற்றுக்குப் பலியாகியிருக்கிறார்கள். அறுபதுகளில் இருக்கும் அருணாச்சலம், தன் வாழ்நாளின் இறுதிவரை பார்வையற்றோர் தொடர்பான களப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர்.
graphic களப்பணியில் ஈடுபட்டிருக்கும் அருணாச்சலம் மற்றும் அவர் மனைவி கீதா

ஊரடங்கினால் வருமானம் இழந்து தவித்த சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்த பார்வையற்ற குடும்பங்களுக்கு ஓடோடி உதவிகளை வழங்கிக்கொண்டிருந்தவர். அவருடைய களப்பணிகளில் அவருடைய மனைவியும் எப்போதும் உடன் இருப்பதையும் நம்மால் பார்க்க முடியும். அவர்களின் இடைவிடாத கலப்பணியில் தொற்றை அவர்கள் எங்கிருந்து பெற்றார்கள் என்பது தெரியவில்லை.

எப்போதும் அவர் நலிவடைந்த பார்வையற்றவர்கள் தொடர்பாகவே சிந்தித்திருக்கிறார். முன்னால் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் திரு. சீதாராம் கேசரி மற்றும் அன்றைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது, மக்களவை உறுப்பினராக இருந்த தனுஷ்கொடி ஆதித்தன் போன்ற அரசியல் பிரமுகர்களிடம் நெருக்கமான உறவைப் பேணியிருக்கிறார். தமிழகப் போக்குவரத்து கழகத்தின் மாற்றுத்திறனாளிகள் குழுவிலும் உறுப்பினராக இருந்தார்.
கரோனா ஊரடங்கு காலம் பார்வையற்ற சமூகத்தின் களப்பணியையும், தன் சமூகத்தின் மீது சக பார்வையற்றவர்கள் கொண்டிருக்கிற உள்ளார்ந்த அன்பையும் உலகத்திற்குப் பறைசாற்றியிருக்கிறது. பார்வையற்றவர்களால் தனிமனித இடைவெளி கடைபிடித்தல் கடினம் என்பதும், அதனால் அவர்கள் எளிதில் தொற்றுக்குள்ளாவார்கள் என்பதையும் அறிந்திருந்தும், ஐயா அருணாச்சலம் அவர்கள் தன் உயிரைக் களப்பணியில் கரைத்திருக்கிறார். அவருக்கு ஒட்டுமொத்த மாற்றுத்திறனாளிகள் சார்பில், சவால்முரசு தனது இரங்களைத் தெரிவித்துக்கொள்கிறது. இதழின் முதல் தலையங்கமே, ஐயாவிற்கான அஞ்சலியாக அமைவதில் பெருமிதம் கொள்கிறது சவால்முரசு.

பகிர

1 thought on “களப்பணி வீரனுக்கு இதழின் அஞ்சலி

  1. பார்வையற்ற ஏழைகள் காவலனாக இருந்த ஒரு நல்ல உள்ளம் மறைவு என்பது ஈடு செய்ய முடியாத இழப்பு பலரும் சேவை செய்ய விரும்பினாலும் சிலருக்கே அந்த வாய்ப்பு அமைகிறது வாய்ப்பு அமைந்தாலும் அதை சரிவர பயன்படுத்திக் கொள்பவர்கள் மிகச் சிலரே அப்படிப்பட்ட சிலரில் ஒருவரை எழுந்திருப்பது உண்மையிலேயே மனதிற்கு வேதனை அளிக்கிறது உங்களுக்கு எனது நன்றிகள் அவரின் மறைவை உடனடியாக ஆவன படுத்தியதற்கு வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *