
கரோனா தடுப்பூசி செலுத்துவதாகக்கூறி, முற்றிலும் காதுகேளாத மற்றும் வாய் பேசாத நபருக்குக் குடும்பக் கட்டுப்பாடு செய்த கொடுமை உத்திரப்பிரதேசத்தில் நடந்து்ள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம், ஏட்டா மாவட்டத்தின் பிஷன்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் துருவ் குமார். திருமணமாகாத இவருக்கு 40 வயதாகிறது. ஜூலை 11 உலக மக்கள்தொகை தினத்தை முன்னிட்டு, குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை மக்களிடம் வலியுறுத்தி, குறிப்பிட்ட எண்ணிக்கையில் குடும்பக் கட்டுப்பாடு செய்யவைக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என உத்திரப்பிரதேச அரசு அறிவித்தது.
இதன் காரணமாக, நீலம் குமாரி என்ற ஆஷா பணியாளர்,
(ASHA Accredited Social Health Activist)
சமூக சுகாதார ஆர்வலர் துருவிடம் கரோனா தடுப்பூசி செலுத்துவதாகக்கூறி, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று குடும்பக் கட்டுப்பாடு செய்துள்ளார். அறுவை சிகிச்சைக்குப் பிறகு வீட்டுக்கு வந்த துருவ் மயங்கி விழுந்ததை அடுத்து அவர் ஆக்ரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் இந்த உண்மையைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
வெறும் 400 ரூபாய் ஊக்க ஊதியத்திற்கு ஆசைப்பட்டு இந்தக் கொடூரச் செயலில் அந்த ஆஷா பணியாளர் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. தன்னுடன் வந்து துருவ் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டால், அவருக்கு ரூ. 3000 கிடைக்கும் என துருவின் குடும்பத்தாரிடம் ஆசை காட்டியிருக்கிறார் நீலம் குமாரி. ஆனால், ரூ. 3000 என்பது, குடும்பக் கட்டுப்பாட்உ செய்துகொள்ளும் ஆண்களுக்கு உத்திரப்பிரதேச அரசால் வழங்கப்படும் ஊக்கத்தொகை என்பதைக்கூட குடும்பத்தார் யோசிக்கவில்லை.
இந்தச் சம்பவத்தை வன்மையாகக் கண்டித்துள்ள ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை
(NPRD-National Platform for Rights of Disabled),
இதன்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்குக் கடிதம் எழுதியிருக்கிறது.
அந்தக் கடிதத்தில், ஊனமுற்றோர்களிடையே கரோனா மற்றும் கரோனா தடுப்பூசி தொடர்பான போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தாததன் விளைவாகவே இந்தச் சம்பவம் நடந்துள்ளதாக வேதனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, இந்தச் சம்பவம், ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம் 2016 வலியுறுத்தும் ஊனமுற்றோருக்கான இனப்பெருக்க உரிமைகள் மற்றும் பாதுகாப்பிற்கு எதிராக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், சரிசெய்ய இயலாத இழப்பைச் சந்தித்துள்ள அந்த ஊனமுற்ற நபருக்கு அரசின் சார்பில் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் எனவும், ஆஷா எனப்படும் சமூக சுகாதார அலுவலர்களுக்கு ஊனமுற்றோர் குறித்தும், அவர்களின் தேவைகள் குறித்தும் அடிப்படைப் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நன்றி, டைம்ஸ் ஆஃப் இந்தியா 13 ஜூலை 2021
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
